×

மகளுக்கு வரதட்சணை கொடுமை: கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

மதுரை: மகளிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதால், கலெக்டர் அலுவலகத்தில் தாய் தீ குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டம் சிலைமான் கல்மேட்டை சேர்ந்தவர் அழகம்மாள்(40). இவர் நேற்று தனது மகள் கவுசல்யா(22) உடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். கொரோனாவால் நேற்று இங்கு மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவில்லை. இதனால், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் மனுக்கள் பெறவில்லை. ஒருசிலர் மனு கொடுக்க வந்திருந்தனர். அதனை அதிகாரிகள் வாங்கி பெட்டியில் போட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, அழகம்மாள் தான் கொண்டு வந்திருந்த கேனை எடுத்து அதில் உள்ள மண்ணெண்ணெய்யை தனது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைக் கண்டு அங்கு ஓடி வந்த போலீசார், தடுத்து நிறுத்தினர். பின்பு அவரை விசாரணைக்காக தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அழகம்மாள் கூறும்போது, ‘‘எனது மகள் கவுசல்யாவுக்கு மணிகண்டன் என்பவருடன் திருமணமாகி 6 மாதங்களே ஆகின்றன. இந்நிலையில் மணிகண்டன் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு எனது மகளை துன்புறுத்தி, என்னையும் கொடுமைப்படுத்தினர். இதுதொடர்பாக நான் போலீசாரிடம் புகார் கொடுத்தேன். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்து எனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கருதி, கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன்’’ என்றார். இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Dowry ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை