×

கன்னிவாடியில் ரூ.5 கோடியே 90 லட்சம் மதிப்பில் புதிய பஸ்நிலையம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்

சின்னாளபட்டி, ஜன. 3: கன்னிவாடியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5 கோடியே 90 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய பஸ்நிலையத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி பேரூராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5கோடியே 90லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ்நிலையம் அமைக்க ஏற்பாடு செய்தார். புதிய பஸ்நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா கன்னிவாடியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ச.விசாகன் தலைமை தாங்கினார். திண்டுக்கல் எம்.பி.ப.வேலுச்சாமி, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார், ஒன்றிய பெருந்தலைவர் ப.க.சிவகுருசாமி, பேருராட்சி உதவி இயக்குநர் மனோரஞ்சிதம்  முன்னிலை வகித்தனர்.

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும். பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் பேசியதாவது: மலைக்கிராம மக்களுக்கு தார்ச்சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்தது திமுக ஆட்சிதான். குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள ஆடலூர், பன்றிமலை, குத்துக்காடு, சோலைக்காடு, தோனிமலை உட்பட அனைத்து மலைப்பகுதிகளுக்கும் சாலை வசதி ஏற்படுத்திக்கொடுத்தது திமுக ஆட்சிதான் என்றார். கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: கடந்த 2011ம் வருடம் திமுக ஆட்சியின் போது எம்பி தொகுதி  மேம்பாட்டு நிதி ரூ.1.5கோடி மதிபில் பஸ்நிலையம் அமைக்க பணிகள் தொடங்கப்பட உள்ள நிலையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் 200 நாட்களுக்குள் கன்னிவாடியில் புதிய பஸ்நிலையம் 6 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க இன்று பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இது போல சீவல்சரகு பகுதியில் கூட்டுறவத்துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரைவில் துவங்கப்பட உள்ளது. 50 வருடங்களாக சின்னாளபட்டியில் உள்ள சாயப்பட்டறை தொழிலாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சாயசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

ஆத்துப்பட்டியில் பாலம் மற்றும் தடுப்பனை வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்பட உள்ளது. கன்னிவாடி பஸ்நிலையத்திலிருந்து சென்னைக்கும், பெங்களூருக்கு பஸ்வசதி செய்து கொடுக்கப்படும். விரைவில் கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் தண்டபானி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய துணைப்பெருந்தலைவர் ராஜேஸ்வரி தமிழ்ச்செல்வன், கன்னிவாடி பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சண்முகம், கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் புவனராணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஊராட்சிமன்ற தலைவர்கள் அருணாசலம், தங்கபாண்டியன், கொத்தப்புள்ளி ஊராட்சி சுந்தரி அன்பரசு, டி.பண்ணைப்பட்டி தனபாக்கியம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் முத்துகிருஷ்ணன், ஏ.ஆர்.கே.ரமேஷ், ஒன்றியகுழு உறுப்பினர்கள் காளீஸ்வரி மலைச்சாமி, திருப்பதி, புதுப்பட்டி திமுக நிர்வாகி உதயக்குமார், கன்னிவாடி நகர அவைத்தலைவர் பெருமாள், 14வது வார்டு பூமி, இளைஞர் அமைப்பாளர் கோபி, மாவட்ட பிரதிநிதி பெருமாள், தேங்காய் சரவணன், உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் இசக்கி நன்றி கூறினார்.

Tags : Minister ,I. Periyasamy ,Kanniwadi ,
× RELATED ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு தடை