நாமக்கல்: நாமக்கல் மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலகங்களில், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தஸ்தில் 3 ஆண்டுக்கு மேல் பணியாற்றும் அலுவலர்களை, இடமாற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் பெரியண்ணன், நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்து வந்தது.
இதேபோல், உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் குமார், வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், அங்கு பணியாற்றி வரும் தலைமை ஆசிரியர் புகழேந்தி, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பணியிடம், கடந்த பிப்ரவரி மாதம் முதல் காலியாக இருந்து வந்தது.
இந்த இடத்துக்கு பழையபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக(மேல்நிலை, உயர்நிலை கல்வி) பணியாற்றியுள்ளார். இந்த பணியிடம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய முக்கிய பணியிடம் ஆகும். எனவே, ஏற்கனவே இந்த பணியில் அனுபவம் பெற்ற மணிவண்ணனை, மீண்டும் நேர்முக உதவியாளராக முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி நியமித்துள்ளார். முதன்மைக் கல்வி அலுவலர் பிஏ பணியிடத்தை பிடிக்க 3 தலைமை ஆசிரியர்கள் இடையே கடும் போட்டி காணப்பட்டது. இறுதியில் முதன்மைக் கல்வி அலுவலர் தனது விருப்பபடி, இந்த பணியிடத்தை நிரப்பியுள்ளார்.