×

துணிக்கடை ஊழியரை கத்தியால் வெட்டி பைப்பால் தாக்கி கொலை மிரட்டல் கடைக்குள் புகுந்து பணம் அபேஸ்; 4 பேர் கைது

திருவள்ளூர், டிச.28: திருவள்ளூர் அருகே துணிக்கடை ஊழியரை கத்தியால் வெட்டி, இரும்பு பைப்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு, கடைக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவள்ளூரை அடுத்த சின்ன ஈக்காடு, அன்னை தெரேசா நகரில் வசித்து வருபவர் ஆனந்தன் மகன் பரத் (23). திருவள்ளூர் ஜெ.என். சாலையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்றுமுன் தினம் காலையில் வழக்கம் போல வேலைக்கு புறப்பட்டார். கடையின் அருகே வந்தபோது மறைந்திருந்த 4 பேர் திடீரென பரத்தை வழிமறித்தனர். பின்னர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் இரும்பு பைப்புகளால் பயங்கரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

மேலும் பரத் வேலை செய்யும் துணி கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கல்லாவில் இருந்த 1000 ரூபாயை எடுத்து கொண்டு தப்பினர். இதனால் கடையில் வேலை பார்த்த ஊழியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் சதீஷ் (27) மற்றும் பலத்த காயமடைந்த பரத் ஆகியோர் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் பத்ம பபி வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பரத்தை தாக்கியது, பத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த தனுஷ் (20), விஜய் (20), வள்ளுவர்புரத்தை சேர்ந்த சூர்யா (20), காக்களூர் பகுதியை சேர்ந்த விக்ரம் (18) என்பதும், முன்விரோதம் காரணமாக தாக்கியதும் தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Abbess ,
× RELATED மூதாட்டியின் சடலத்தில் இருந்து 10...