கரூர், டிச. 28: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த முகாமில், தலித் விடுதலை இயக்க நிர்வாகிகள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா புஞ்சைக்காளக்குறிச்சி கிராமம் காசிபாளையத்தில் அருந்ததியர் மக்கள் 100க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியினர் அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர். வடக்குத்தெருவில் உள்ள மயானத்திற்கு அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தினால், இறுதி சடங்குகள் செய்யும் போது பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர். தெற்கு தெருவில் உள்ள பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டத்தில் 2008, 2009ல் கட்டப்பட்ட நெசவுக்கூடத்தில் மின் இணைப்பு இல்லாததால் திட்டம் பயன்பாட்டில் இல்லை. கழிப்பறை வசதியும் இல்லை. சாலை வசதி இல்லாத காரணத்தினால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கியும் பல்வேறு தொந்தரவுகளை இந்த பகுதியினர் அனுபவித்து வருகின்றனர். எனவே, இந்த பகுதியினர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.