×

தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் திருட்டு ஆரணி அருகே மர்ம ஆசாமிகள் கைவரிசை

ஆரணி, டிச.27: ஆரணி அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து, மகள் திருமணத்திற்காக அவர் சேர்த்து வைத்திருந்த 20 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வடுக்கசாத்து கிராமத்தை சேர்ந்தவர் தருமன்(59). ஆரணியில் உள்ள ரைஸ் மில்லில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காமாட்சி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். 2வது மகளுக்கு திருமணமாகவில்லை. அவர், சென்னையில் தங்கி நகைக்கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் காமாட்சி, சென்னையில் உள்ள தனது மகளை பார்ப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற நிலையில், தருமன் மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு பணிக்காக தருமன் வீட்டை பூட்டிக் கொண்டு ரைஸ் மில்லுக்கு புறப்பட்டு சென்றார். வேலை முடிந்ததும் நேற்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும், அவரது மகளின் திருமணத்திற்காக சிறுகசிறுக சேர்த்து, பீரோவில் வைத்திருந்த 20 சவரன் நகைளை காணவில்லை. இரவில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு, மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தருமன் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து, திருவண்ணாமலையில் இருந்து கைரேகை நிபுணர் சுரேஷ்குமார் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், தருமன் அளித்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Asamis ,20 ,Sawaran ,Orani ,
× RELATED விழுப்புரம் மின்னணு வாக்கு...