×

ஊட்டி - மஞ்சூர் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல்

ஊட்டி, டிச. 27:    ஊட்டி - மஞ்சூர் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து லவ்டேல், காத்தாடிமட்டம், கைகாட்டி வழியாக அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இதுதவிர மலை காய்கறி பாரம் ஏற்றி வர கூடிய லாரிகள் இவ்வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் ஊட்டி 6வது மைல், நுந்தளா, தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் இருபுறமும் தனியார் வாகனங்கள் அதிகளவு நிறுத்தப்படுகின்றன. இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை சீராக இயக்க முடிவதில்லை. எதிரே வரும் வாகனங்களும் வழியும் விட முடிவதில்லை.

சில இடங்களில் சாலையோரங்களில் நிறுத்தி வாகனங்களை கழுவும் பணிகளிலும் ஈடுபடுகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்பட கூடிய அபாயமும் நீடிக்கிறது. குறிப்பாக ஆறாவது மைல் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து இவ்வழியாக நாள்தோறும் பயணிக்கும் வாகன ஓட்டிகள் காவல்துறையினரிடம் புகாரும் தெரிவித்துள்ளனர். எனவே, ரூரல் காவல் நிலைய போலீசார் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும், அவ்வாறு நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

Tags : Ooty-Manjur road ,
× RELATED ஊட்டி - மஞ்சூர் சாலையில் பூத்துக்குலுங்கும் ‘செர்ரி’ மலர்கள்