×

கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டதால் பிளேடால் கழுத்தை கிழித்து கொண்ட வாலிபர்

விருத்தாசலம், டிச. 24: விருத்தாசலம் அருகே உள்ள சாத்தியம் கிராமத்தில் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் (26) என்பவர் கஞ்சா விற்பனை செய்ததாக கூறி தனிப்படையினர் அவரை பிடித்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் கொண்டுவந்து ஒப்படைத்தனர். அப்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வந்தனர். இதற்காக அவரை போலீசார் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது அரசு மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் ஒரு பிளேடை மணிகண்டன் கையில் எடுத்து வந்துள்ளார்.

தொடர்ந்து அவரிடம் இருந்து 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து கைதுக்கான ஏற்பாடுகளை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் செய்து கொண்டிருந்தனர். அப்போது போலீசாரிடம், என்னை விட்டுவிடுங்கள் என கூறி திடீரென கையில் வைத்திருந்த பிளேடால் தனது கழுத்தை கிழித்து உள்ளார். இதனால் கழுத்தில் இருந்து ரத்தம் பீய்ச்சி அடித்ததை பார்த்து கொண்டிருந்த பெண் காவலர் ஓடிச்சென்று மணிகண்டன் கையிலிருந்த பிளேடை பறித்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். அப்போது அந்த பெண் காவலரின் கையிலும் லேசான காயங்கள் ஏற்பட்டது. தகவல் அறிந்த ஏஎஸ்பி அங்கிட் ஜெயின் வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு மணிகண்டனை போலீசார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மணிகண்டனின் உறவினர்கள் காவல் நிலையத்தில் திரண்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : Blade ,
× RELATED 10 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த மோடி:...