திருவில்லிபுத்தூர், டிச. 23: தமிழக அரசின் முத்திரைச் சின்னமாக விளங்கும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்தில் சுமார் 40 இடங்களில் பெரிய மற்றும் சிறிய அளவிலான மரங்கள் முளைத்திருந்தன. கோபுரத்தின் பாதுகாப்பு கருதி இவற்றை அகற்ற ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணிசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே வரை பாதுகாப்புக்காக கயிறு கட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். மேலும் கோபுரத்தில் பல்வேறு இடங்களில் கூடு கட்டியிருந்த தேனீக்களையும் அகற்றுவோம் என தீயணைப்புத்துறை வீரர்கள் தெரிவித்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.