விருதுநகர், டிச. 23: பஸ் நிற்காமல் சென்றதால், ஆத்திரமடைந்த மாணவர்கள் பஸ் மீது கல்வீசி தாக்கினர்.விருதுநகர் அருகே உள்ள மீனாட்சிபுரம், மருளுத்து கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் அரசு பஸ்களை நம்பியே பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். மருளுத்து பஸ் நிறுத்ததில் பஸ்க்கு காத்திருந்த மாணவர்கள், நேற்று காலை 8 மணியளவில் சங்கரலிங்கபுரத்தில் இருந்து விருதுநகர் வந்த அரசு பஸ்சை நிறுத்த கைகளை காட்டி உள்ளனர். பயணிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் பஸ் டிரைவர் தமிழ்முனி (34) பஸ்சை நிற்காமல் இயக்கி உள்ளார்.
விருதுநகர் தனியார் பள்ளிகளில் 9, 10, 11 படிக்கும் 9 மாணவ, மாணவியர் பள்ளிக்கு செல்ல நேரம் ஆகி விடுமோ என்ற ஆத்திரத்தில் பஸ் மீது கற்களை வீசி உள்ளனர். பஸ்சின் பின்புற கண்ணாடி முழுமையாக உடைந்து சிதறியது. பஸ்சில் இருந்த பயணிகளில் எவருக்கும் காயமில்லை. சூலக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு, பஸ்சையும், மாணவர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பஸ் டிரைவர் தமிழ்முனி புகாரில், போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் 9 மாணவர்களும் சே ர்ந்து கற்களை எறிந்ததாக தெரிவித்ததை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.