×

திருவாதிரையை முன்னிட்டு ஐயாறப்பர் கோயிலில் நடராஜர் சுவாமிக்கு பூ போடும் விழா

திருவையாறு,டிச.22: திருவாதிரையை முன்னிட்டு திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் நடராஜர் சுவாமிக்கு பூ போடும் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருவையாறு பஞ்சநதீஸ்வரர் சுவாமி கோயில் தெற்கு கோபுர வாசலில் அமைந்திருக்கும் ஆட்கொண்டேஸ்வரர் சுவாமிக்கு மார்கழி மாதம் திருவாதிரையை முன்னிட்டு விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு ஆட்க்கொண்டேஸ்வரர் சுவாமிக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் போன்ற திரவிய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலையில் வட மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சிவகாமசுந்தரி, நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் சன்னதியில் இருந்து புறப்பட்டு ஆட்கொண்டார் சன்னதி வந்தடைந்தார். புஷ்ப மண்டப படித்துறை காவிரி ஆற்றில் சூலபாணிக்கு பால், தேன், சந்தனம் போன்ற திரவிய பொருளைக் கொண்டு அபிஷேகம் செய்து தீர்த்தவாரி நடைபெற்றது. பிறகு நடராஜர் பெருமானுக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பூ போடும் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து வீதிஉலா ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று சன்னதிக்கு சென்றது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து இறைவனின் அருளை பெற்று சென்றனர். கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக விழா நடைபெறாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு அறிவித்த தளர்வை பின்பற்றி விழா நடைபெற்றது பக்தர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Tags : Natarajar ,Swami ,Aiyarappar Temple ,Thiruvathirai ,
× RELATED சித்திரை (ஈ) தந்த முத்திரை சீடர்கள்