புதுக்கோட்டை, டிச. 21: நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் மற்றும் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய மாவட்ட நிலை அலுவலகத்திற்கு கேடயத்தையும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதா ராமு நேற்று வழங்கினார். பின்னர் அவர் தெரிவித்ததாவது;
நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்றன. இந்த பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு காசோலையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இதில் முதல் பரிசு ரூ.5,000மும், இரண்டாம் பரிசு ரூ.3,000மும், மூன்றாம் பரிசு ரூ.2,000மும், அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு ரூ.2,000 வீதம் சிறப்புப் பரிசும் என மொத்தம் ரூ.48,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கும் மாவட்ட நிலை அலுவலகத்திற்கு கேடயம் வழங்கும் திட்டத்தின் கீழ், 2019ம் ஆண்டுக்கு புதுக்கோட்டை மாவட்ட சிறை அலுவலகத்திற்கு கேடயம் வழங்கிப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் ராசேந்திரன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.