ஊட்டி,டிச.20: பறவை காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள கக்கநல்லா சோதனை சாவடியில் கலெக்டர் ஆய்வு செய்தார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்திலும் பறவைகள் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் கோழிகள், பறவைகள் மற்றும் தீவன பொருட்களை நீலகிரி மாவட்டத்திற்குள் கொண்டு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க கர்நாடக எல்லையில் அமைந்துள்ள கக்கநல்லா, கேரள எல்லையில் அமைந்துள்ள நம்பியார் குன்னு, தாளூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி மற்றும் பாட்டவயல் ஆகிய எட்டு சோதனை சாவடிகளில் கால்நடைத்துறை, வருவாய், வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகா எல்லையான கக்கநல்லா சோதனை சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கும் பணிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பறவை காய்ச்சல் பாதிப்பு நீலகிரிக்குள் நுழையாதவாறு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். கோழிகள் வளர்ப்போர் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன், கூடலூர் ஆர்டிஒ., சரவண கண்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.