×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளினார்

திருவண்ணாமலை, டிச.20: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆருத்ரா தரிசன விழா இன்று நடக்கிறது. அதையொட்டி, ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் நேற்று இரவு எழுந்தருளி அருள்பாலித்தார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, சிவாலயங்களில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு மிக்கது. அதன்படி, பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற ஆருத்ரா தரிசனம் இன்று காலை நடைபெறுகிறது.

அதையொட்டி, அலங்கார ரூபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர், அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று இரவு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று அதிகாலை 4 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடைபெறும். பின்னர், காலை 9 மணி அளவில் விசேஷ பூஜைகள் நடைபெறும். அப்போது, கடந்த மாதம் 19ம் தேதி மலை மீது காட்சியளித்த மகாதீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீபச்சுடர் பிரசாதம் (தீப மை), நடராஜருக்கு அணிவிக்கப்படும்.

பின்னர், அலங்கார ரூபத்தில் 5ம் பிரகாரத்தில் புறப்பட்டு திருமஞ்சன கோபுரம் வழியாக சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அப்போது, திருவண்ணாமலையில் திருவெம்பாவை அருளிய மாணிக்கவாசக பெருமானும் மாடவீதியில் வலம் வருகிறார். அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் உற்சவ மூர்த்திகள் வீதியுலா புறப்பாடு எப்போதும் ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டிவாசல் வழியாக நடைபெறுவதே வழக்கம். ஆனால், நடராஜர் வீதியுலா புறப்பாடு மட்டும் திட்டிவாசல் வழியாக நடைபெறுவதில்லை. அதற்கு மாற்றாக, தெற்கு கோபுரம் எனப்படும் திருமஞ்சன கோபுரம் வழியாக நடராஜர் வீதியுலா புறப்பாடு நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.

மேலும், கார்த்திகை தீபத்திருவிழாவின்போது மாடவீதியில் சுவாமி வீதியுலா நடைபெற விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது தளர்த்தப்பட்டுள்ளதால், நடராஜர் வீதியுலா இன்று காலை மாடவீதியில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆருத்ரா விழாவில் சுவாமிக்கு தீப மை அணிவிக்கப்பட்ட பின்னர், மகாதீப ெநய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு வரும் 28ம் தேதி முதல் தீப மை வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள், அதற்கான ரசீதை காண்பித்து, கோயில் நிர்வாக அலுவலகத்தில் தீப மை பெற்றுக்கொள்ளலாம்.

Tags : Natarajar ,Thiruvannamalai Annamalaiyar Temple ,Arudra Darshan Aiyarangal Mandapam ,
× RELATED சிதம்பரம் கோயிலில் உள்ள கோவிந்தராஜ...