×

பேராவூரணி - திருச்சி செல்லும் அரசு பழைய பேருந்தை மாற்ற வேண்டும்

பேராவூரணி,டிச.16: பேராவூரணியிலிருந்து திருச்சி செல்லும் அரசு பழைய பேருந்தை மாற்றிவிட்டு புதுப்பேருந்து இயக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணியிலிருந்து காலை 9 மணிக்கும், மாலை 5.50 மணிக்கும் ஆவணம், வடகாடு, ஆலங்குடி, புதுக்கோட்டை, வழியாக திருச்சிக்கு ஆலங்குடி பணிமனையிலிருந்து அரசு பேருந்து இயக்கப்படுகிறது. தினசரி இந்த பேருந்தில் பல்வேறு காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் பயணம் செய்கின்றனர். கடந்த ஆண்டு வரை இந்த தடத்திற்காக 1058 என்ற எண்ணுள்ள புதிய பேருந்து ஓடிவந்த நிலையில் தற்போது அந்த பேருந்தை வேறுவழித்தடத்திற்கு மாற்றிவிட்டப்பட்டது. இதனால் பேராவூரணி பகுதிக்கு பழைய பேருந்து இயக்கப்படுகிறது. அடிக்கடி டயர் பஞ்சராகி காலதாமதம் ஆவது, ஆமை வேகத்தில் செல்வது, பேருந்துக்குள் அமர்ந்து செல்லமுடியாத அளவிற்கு இரைச்சல் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை பயணிகள் அனுபவிக்கின்றனர். பழைய பேருந்து காரணமாக அரசு பேருந்துக்கு முன்பும், பின்பும் உள்ள தனியார் பேருந்தில் பொதுமக்கள் ஏறும்நிலை உள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே தற்போது இயக்கப்படும் பழைய பேருந்தை மாற்றிவிட்டு பேராவூரணி பகுதிக்கு ஒதுக்கப்பட்ட பேருந்தை இயக்கவேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Peravurani ,Trichy ,
× RELATED பேராவூரணி நீதிமன்றத்திற்கு கட்டிடம் கட்ட இடம்