ஓசூர், டிச.16: ஓசூரில் பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும். மரகதாம்பிகைக்கு தனித்தேரும், சந்திரசூடேஸ்வரருக்கு தனி தேரும் உள்ளது. தேர் திருவிழாவின் போது ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசன்ம செய்வது வழக்கம். இந்நிலையில், மரகதாம்பிகை அம்மனின் சிறிய தேர் பழுதடைந்துள்ளதால், உபயதாரர்கள் பங்களிப்புடன் தேரை, புதிதாக அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, நேற்று ஓசூர் தேர்பேட்டையில் வாஸ்து பூஜை மற்றும் சிறப்பு பூஜைகளுடன், மரகதாம்பிகை அம்மனின் சிறிய தேர் புதிதாக அமைக்கும் பணி தொடங்கியது. தலைமை குருக்கள் வாசீஸ்வரர் பூஜைகளை நடத்தினார். திருவண்ணாமலை டிவிஷன் அறநிலையத்துறை ஆணையர் கஜேந்திரன், சந்திரசூடேஸ்வரர் தேர் திருவிழா கமிட்டி தலைவரும், ஓசூர் முன்னாள் எம்எல்ஏவுமான மனோகரன் ஆகியோர் முன்னிலையில் வாஸ்து பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சூடப்பா, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள், தேர்பேட்டை கிராம மக்கள் கலந்துகொண்டனர். திருவாரூரை சேர்ந்த இளவரசன் ஸ்தபதி புதிய தேரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.