நத்தம், டிச. 6: நத்தம் அருகே பெரியூர்பட்டி காமாட்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் லெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி, சதுர்வேதம் யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை மண்டபசாந்தி, மூர்த்திகள் ரக்ஷாபந்தம், கோ பூஜைகள் நடந்தது. பின்னர் காசி, ராமேஸ்வரம், கரந்தமலை, அழகர் மலை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் பூஜைகளுக்கு பின் யாகசாலையில் இருந்து கோபுர உச்சிக்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.
அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது. அப்போது கோயிலை சுற்றி நின்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு புனித தீர்த்தமும், பூஜை மலர்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் எம்எல்ஏ ஆண்டிஅம்பலம், மாவட்ட கவுன்சிலர் விஜயன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பெரியூர்பட்டி, காமாட்சிபுரம் ஊர் மக்கள் செய்திருந்தனர்.