ஊட்டி, டிச. 15: தேசிய பசுமைப்படை சார்பில் நம் வீட்டு தோட்டத்தில் இயற்கை விவசாயம் என்ற தலைப்பில் இயற்கை விழிப்புணர்வு பதாகை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது. ஊட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு நம் வீட்டு தோட்டத்தில் இயற்கை விவசாயம் என்ற தலைப்பில் இயற்கை விழிப்புணர்வு பதாகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் நாசாருதீன், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், அனைத்து பள்ளி மாணவர்களும் ஆரம்பப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை அனைத்து மாணவர்களும் இயற்கை விவசாயம் அவர்கள் வீட்டில் இருந்து தொடங்க வழிகாட்டுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் இல்லா நீலகிரி மாவட்டம், குப்பைகளை பிரித்து சூழல் மேம்பாட்டிற்கு உதவக்கூடிய பணிகளை, வீட்டில் இருந்தே தொடங்குவது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. மண்ணை தொடுவோம் நீலகிரி உயிர்ச்சூழல் பாதுகாப்போம் என்ற செயல்திட்டத்தை மகாத்மா காந்தி அடிகளின் 150வது ஆண்டு நினைவாக நீலகிரி தேசிய பசுமைப்படை இந்த செயல் திட்டத்தை மாணவர்கள் எடுத்துச் செல்கின்றது.
மண்ணை தொடுவோம் நீலகிரி உயிர்ச்சூழல் பாதுகாப்போம் என்கின்ற எழுச்சி வார்த்தைகள் அடங்கிய பதாகை முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டார். அதனை முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் செய்திருந்தார்.