×

வாலிபர் உயிரிழந்த வழக்கு: 2 போலீசார் கோர்ட்டில் சரண்

ராமநாதபுரம், டிச.14: எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனில் மதுரை வாலிபர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக தலைமறைவாக இருந்த போலீசார் 2 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். மதுரையை சேர்ந்த ராமானுஜன் மகன் வெங்கடேசன்(26). திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த 2012 அக்.2ல் எமனேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு,போலீசார் தாக்கியதில் வெங்கடேசன் உயிரிழந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக எஸ்எஸ்ஐ முனியசாமி உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. பணி ஓய்வு பெற்ற முனியசாமி, கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.

உடல் நலம் பாதித்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் இறந்தார். இந்த வழக்கு தொடர்பாக போலீஸ்காரர் ஞானசேகரன், தனிப்பிரிவு போலீசார் கிருஷ்ணவேல்(முதுகுளத்தூர்), கோதண்டராமன் (சாயல்குடி) ஆகியோரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த போலீசார் ஞானசேகரன்(39), கிருஷ்ணவேல்(40) ஆகியோர் ராமநாதபுரம் ஜேஎம் 1 கோர்ட் நீதிபதி சிட்டிபாபு முன்னிலையில் நேற்று சரணடைந்தனர். இருவரையும் டிச.27 வரை சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தலைமறைவாக உள்ள கோதண்டராமனை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Valipar ,
× RELATED ஸ்ரீதிவ்யா ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!