செந்துறை,டிச.14: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூர் ஆனைவாரி ஓடையில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல இடங்களில் மணல் குவியல்கள் நிறைந்துள்ளன. இந்நிலையில் குழுமூர், வங்காரம் பகுதியில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடைபெறுவதாக செந்துறை போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது குழுமூர் கிராமத்தை சேர்ந்த ஆதிமூலம்(60), பழனிவேல்(34) மற்றும் வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன்(40) ஆகியோர் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வருவதை கண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தங்கள் வீட்டிற்கு மணல் எடுப்பதாக சம்பந்தப்பட்ட நபர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உரிய அனுமதியின்றி மணல் எடுத்த மூவரின் மீது செந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அவர்கள் பயன்படுத்திய மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்து செந்துறை காவல்நிலையம் கொண்டு வந்தனர்.