தென்காசி, டிச. 10: புளியங்குடியில் விஎச்பி நகர தலைவர் அழகுகிருஷ்ணனின் மரக்கடைக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு மர்மகும்பல் தீ வைத்தது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் கன்னியாகுமரி கோட்ட தலைவர் காமராஜ், விஸ்வஇந்து பரிஷத் மாநில தலைவர் குழைக்காதர், மாநில அமைப்பாளர் சேதுராமன், இணை செயலாளர் காளியப்பன், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா, செயலாளர் குற்றாலநாதன், பாஜ தேசிய செயற்குழு உறுப்பினர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தென்காசி கலெக்டர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதற்கு இதய பூர்வ அஞ்சலியை செலுத்துகிறோம். பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ளும் உள்ள உறுதியோடு இருந்தார். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. விபத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை வந்த பிறகுதான் கருத்து சொல்ல முடியும்.
புளியங்குடியில் விஎச்பி அலுவலகம் திறந்த 2வது நாள், அழகுகிருஷ்ணனின் மரக்கடைக்கு தீ வைக்கப்பட்டு உள்ளது. சம்பவம் நடந்து ஒன்றரை மாதமாகியும் விசாரணை, கைது நடவடிக்கை இல்லை. இவ்விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை கோரி கலெக்டர், எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம், என்றார். பேட்டியின் போது இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகச்சாமி, பாஜ மாவட்ட தலைவர் ராமராஜா, பொதுச்செயலாளர் ராஜேஷ் ராஜா, விஎச்பி மாநில பிரசார பிரிவு செயலாளர் ஆறுமுகக்கனி, இந்து முன்னணி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சாக்ரடீஸ், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தூர்பாண்டியன் மற்றும் இசக்கிமுத்து, குத்தாலிங்கம், சங்கர சுப்பிரமணியன், காளிமுத்து, சபரிமணி ஆகியோர் உடனிருந்தனர்.