களக்காடு, டிச. 10: களக்காடு அருகே வெள்ளத்தால் சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்றி விட்டு புதிதாக உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே சிதம்பரபுரம் கிராமம் உள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சிதம்பரபுரம் கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளுக்கும், வெளியூர்களுக்கு செல்லவும் களக்காட்டிற்கு தான் வர வேண்டும். சிதம்பரபுரம்-களக்காடு இடையே ஓடும் நாங்குநேரியான் கால்வாய் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தை கடந்து தான் அவர்கள் களக்காட்டிற்கு வரவேண்டும். இந்த தரைப்பாலமானது கடந்த 1975ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதனால் பாலம் பழுதடைந்து உள்ளது.
மேலும் மழைக்காலங்களில் அடிக்கடி தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி விடுகிறது. பாலத்தின் மீது காட்டாற்று வெள்ளம் ஓடியதால் தரைப்பாலம் பழுதடைந்த நிலையில் காட்சி அளிக்கின்றது. பாலத்தின் தடுப்பு தூன்கள் இடிந்து, சிதிலமடைந்துள்ளது. அத்துடன் பாலத்தின் மீது வெள்ளம் செல்லும் போதெல்லாம் சிதம்பரபுரம் கிராமம் துண்டிக்கப்பட்டு தனி தீவாக மாறி விடுகிறது. மேலும் உயிரிழப்புகளும் நடந்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 3ம் தேதி பாலத்தின் மீது சென்ற வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, லேகா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்துள்ளார். எனவே தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என்றும், ஆற்றின் கரையோரமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.?