தா.பழூர்,டிச.10: அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை ஊக்குவிக்கும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் இந்நிகழ்ச்சியில் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் கொரோனா காலத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் படிப்பில் பின்தங்கி உள்ளவர்கள் பள்ளி முடிந்த பின்பு மாலை நேரத்தில் தன்னார்வலர்களால் நடத்தப்படும் மாலை நேர ஊக்குவிப்பு வகுப்பில் சேர்ந்து தனது படிப்பின் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
இதன்படி கிராமிய நடன கலைஞர்கள் மாணவர்களின் முன்பாக நடனம் மற்றும் நாடகங்கள் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சி நடத்தி காண்பித்தனர். அப்பொழுது படிப்பின் முக்கியத்துவத்தை இக்கலை நிகழ்ச்சியின் மூலம் எடுத்துரைத்து மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவழகன் வரவேற்று பேசினார். தா.பழூர் வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி தொடங்கி வைத்தார். ஆசிரிய பயிற்றுனர் சிவா நன்றி கூறினார். மேலும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சி விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய விதிகள் , மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் பொதுமக்கள் முன்பாக இக் கலைக்குழுவினர் கிராமிய கலை நிகழ்ச்சியை நடத்திக் காண்பித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.