திருச்செங்கோடு, டிச.9: திருச்செங்கோட்டில் வாடகை பாக்கியை செலுத்தாத கடைகளை பூட்டிய நகராட்சி அலுவர்கள், சீல் வைத்தனர்.திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் மற்றும் சீதாராம்பாளையத்தில், நகராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் எடுத்தவர்கள், நீண்ட காலமாக வாடகை பாக்கியை செலுத்தவில்லை. பல முறை நோட்டீஸ் வழங்கியும், வாடகையை செலுத்தவில்லை. இதையடுத்து நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில், நேற்று நகராட்சி வருவாய் ஆய்வாளர் கோபி, பணியாளர்களுடன் சென்று வாடகை பாக்கியை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைத்தார். இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்செங்கோடு நகராட்சிக்கு 2021-2022ம் ஆண்டு முடிய பொது மக்கள் மற்றும் வர்த்தக நிறுவனத்தினர் செலுத்த வேண்டிய நிலுவை மற்றும் நடப்பு சொத்துவரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக நகராட்சிக்கு செலுத்தி, ஜப்தி நடவடிக்கை, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்த்து, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.