தேனி, டிச. 7: தேனி பங்களாமேடு ராகவா காலனியைச் சேர்ந்தவர் லட்சுமி (27). இவருக்கும், பெரியகுளம் அருகே, ஜெயமங்கலம் சாந்திநகர் காலனியைச் சேர்ந்த ராஜ்குமார் (31) என்பவருக்கும் 2011ல் திருமணம் நடந்தது. ராஜ்குமாருக்கு சரியாக வேலைக்கு போகாததால், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர். பின்னர் 2020ல் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். அப்போது சுயதொழில் செய்வதற்காக லட்சுமியின் 11 பவுன் நகையை வாங்கி ராஜ்குமார் அடமானம் வைத்துள்ளார். மேலும், லட்சுமி தனது தந்தை பாலுச்சாமியிடம் இருந்து ரூ.1 லட்சம வாங்கி கொடுத்தார். ஆட்டோ, பைக் வாங்கி விற்கும் தொழில் செய்த ராஜ்குமார், மனைவியிடம் பெரியகுளத்திற்கு குடிபோகலாம். அதுவரை தேனியில் தங்கியிரு என தெரிவித்துள்ளார். இதை நம்பிய லட்சுமி தேனியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், லட்சுமி வீட்டிற்கு வருவதை ராஜ்குமார் நிறுத்தினார்.
இது குறித்து விசாரித்தபோது, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள நூத்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அழகுமலை மகள் சுசித்ரா காயத்ரியை, ராஜ்குமார் இரண்டாவது திருமணம் செய்தது தெரிய வந்தது. இது குறித்து லட்சுமி நியாயம் கேட்க, ராஜ்குமார் விவாகரத்து கோரி, பெரியகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கு உடன்பட வேண்டும் என ராஜ்குமார் மிரட்டியுள்ளார். இதையடுத்து லட்சுமி அளித்த புகாரின்பேரில், தேனி அனைத்து மகளிர் போலீசார் 2வது திருமணம் செய்த ராஜ்குமார், உடந்தையாக இருந்த அவரது தந்தை பாண்டியன், தாய் சரோஜா, சகோதரி ரமிளா, அவரது கணவர் ஈஸ்வரன் மற்றும் ராஜ்குமார் இரண்டாவது மனைவி சுசீலா காயத்ரி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.