பந்தலூர், டிச.6: பந்தலூர் அருகே கொளப்பள்ளி பஜார் பகுதியில் கழிவுநீர் கால்வாய் பழுதாகி கழிவுகள் தேங்கி நிற்பதால் நோய்த்தொற்று பரவும் நிலை உள்ளது. பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சி கொளப்பள்ளி பஜார் பயணிகள் நிழற்குடை முன்புறம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இக்கால்வாய் தற்போது பழுதடைந்துள்ளதால் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நின்றுள்ளது. இதனால், கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.
இப்பகுதியில் அரசு பஸ் மற்றும் ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் அதிகமாக நிறுத்தி செல்கின்றன. மேலும் ஏராளமான கடைகள் பொதுமக்கள் நடமாட்டம் இருப்பதால் பழுதடைந்துள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.