திருத்துறைப்பூண்டி, டிச. 6: மாநில அளவிலான இணையவழி வினாடி வினா போட்டியில் வெற்றிபெற்ற நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் பரத்ராம் கல்விசுற்றுலா செல்ல பாஸ்போர்ட் கிடைக்க துரிதமாக உதவிய தமிழக அரசுக்கு திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவில் இணையவழியில் வினாடி - வினா போட்டியில் திருத்துறைப்பூண்டி நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் பரத்ராம் வெற்றி பெற்று ஐக்கிய அமீரகம் துபாய் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்ல தேர்வானார். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து தேர்தெடுக்கபட்ட இருவரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.இதனை அடுத்து இவர் வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்ல பாஸ்போர்ட்க்கு விண்ணப்பித்த நிலையில் விண்ணப்பம் நிராகரிக்கபட்டது.
இந்நிலையில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவரது தந்தை பெயரில் உள்ள ஆவணங்களில் எழுத்து பிழை உள்ளதாக கூறினர். கல்விசுற்றுலா செல்ல குறைவான நாட்களே உள்ளதாலும், மாணவர் மன உளைச்சலாகிவிட கூடாது என்பதாலும் உடனடியாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இதையடுத்து மாணவனுக்கு குறுகிய காலத்தில் கோரிக்கை ஏற்று அரசு பள்ளி மாணவன் கல்வி சுற்றுலா செல்ல பாஸ்போர்ட் கிடைக்க உதவிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாகை எம்பி செல்வராஜ் , திருச்சிராபள்ளி பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள், திருவாரூர் மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு இதய பூர்வ நன்றியினையும் மாணவன் பரத்ராமிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.