சாத்தான்குளம், டிச.5:சாத்தான்குளம் அருகே நெடுங்குளத்தில் மர்மநோய் காரணமாக பசுமாடுகள் இறந்து வருகிறது. ஆதலால் அதிகாரிகள் ஆய்வு நடத்தி நோய்களை கண்டறிய வேண்டும் என தினகரன் நாளிதழிலில் செய்தி வெளியானது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜன் தலைமையில் திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குநர் டாக்டர் செல்வக்குமார், தூத்துக்குடி மாவட்ட நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் சந்தோசம் முத்துக்குமார், நெடுங்குளம் கால்நடை உதவி மருத்துவர் சிவராமகிருஷ்ணன், கால்நடை ஆய்வாளர்கள் விஜயகுமார், வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நெடுங்குளம் கிராமத்தில் களஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது மழை காலங்களில் நீர் தேங்கி மேய்ச்சலுக்கு அனுப்ப இயலாது என்பதால் கால்நடைகளுக்கு அரிசி, சோறு போன்ற தானிய வகைகள் கொடுப்பதால் கால்நடைகள் நோய் வாய்ப்பட்டு இறப்புக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்து பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனம் அடங்கிய தீவனங்களை சரி விகிதமாக பிரித்து போதிய அளவிலேயே வழங்கிட கால்நடை வளர்போருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் மழை காலங்களில் நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க பிளிச்சிங் பவுடர், சலவை சோடா, மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றில் ஏதாவது கிருமி நாசினியை கால்நடைகள் உள்ள கொட்டகைகளில் தெளிக்க அறிவுறுத்தப்பட்டது.