ராமநாதபுரம், டிச. 5: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த நவ.29 ல் கனமழை பெய்தது. அன்று பகலில் மண்டபம் தோப்புக்காடு பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் மங்களேஸ்வரி, நாகசாமி, களஞ்சியம், குப்பை, ராஜாமணி உள்பட 5க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடியிருப்புகள் சேதமடைந்தன. அவற்றை காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
வருவாய் துறை மூலம் அரசு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். கிராம கமிட்டி நிர்வாகிகள் பால்ச்சாமி, ராஜா, மாரிச்சாமி, செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, சாத்தக்கோன்வலசை வார்டு உறுப்பினரான ஹரிசுதனுக்கு, எம்எல்ஏ சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையை உயர்த்தி பெற்று தர முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு எம்எல்ஏ, மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிச்சயம் செய்து தருவதாக உறுதியளித்தார். மண்டபம் ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் ஜீவானந்தம், தௌபீக் அலி, பொறுப்புக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொடர்ந்து எம்எல்ஏ, சாத்தக்கோன்வலசையில் நவ.9ல் ஏற்பட்ட தீ விபத்தில் உடமைகளை இழந்த பிரபு குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கினார்.