வேடசந்தூர், டிச. 4: வேடசந்தூர் அருகே அழகாபுரியில் உள்ளது குடகனாறு அணை. 27 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தொடர்மழையால் தற்போது 24 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு சுமார் 600 கனஅடி வரை தண்ணீர் வருகிறது. குடகனாறு அணையில் இருந்து கரூர் மாவட்டம், வெள்ளியணை வரை விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 2 கால்வாய்களிலும், ஆற்றிலும் தண்ணீர் அதிகளவு சென்று கொண்டிருக்கிறது. இதில் கால்வாய்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால் தண்ணீர் முழுமையாக வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேற்று மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குடகனாறு அணையை பார்வையிட வந்தார். உடன் கலெக்டர்கள் பிரபுசங்கர், விசாகன், எம்எல்ஏக்கள் காந்திராஜன், சிவகாமசுந்தரி, இளங்கோ மற்றும் பொதுப்பணி- வருவாய் துறையினர் வந்தனர்.
அணையை பார்வையிட்ட பின் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், ‘குடகனாறு அணை கால்வாய்களை சரிசெய்வதற்காக நிதி திட்ட வரைவு செய்து முதல்வர், நீர்வளத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்து ரூ.28 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்க உள்ளோம். அதன்பிறகு அணை கால்வாய்கள் சரிசெய்து கால்வாயில் இருந்து குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பி விவசாயிகளுடைய பயன்பாட்டிற்கு முழுமையாக கொண்டு வரப்படும்’ என்றார். இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கவிதா பார்த்திபன், சீனிவாசன், சுப்பையன், முன்னாள் ஒன்றிய தலைவர் பிரிமியம் நடராஜன், நகர செயலாளர்கள் கார்த்திகேயன், சம்பத், கணேசன், கருப்பணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துகிருஷ்ணன், மருதபிள்ளை, கருப்பண்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் தாமரை செல்வி கவிதா, தமிழ்ச்செல்வி, அவைத்தலைவர் ஆரோன் அமிர்த கணேசன், துணை செயலாளர்கள் நாகப்பன், ஆசைத்தம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.