வல்லம், டிச.2: தினகரன் செய்தி எதிரொலியாக பூதலூர் ஆர்த்தி நகரில் தேங்கியிருந்த மழைநீரை ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆகியோர் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர். தஞ்சை மாவட்டம் பூதலூர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் அமைந்துள்ளது ஆர்த்திநகர். இங்கு சுமார் 50க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. பூதலூர் பகுதியில் பெய்த கனமழையால் ஆர்த்திநகர் பகுதியில் மழைநீர் தேங்கி நின்று வடிய வழியின்றி இருந்தது.
இதனால் இப்பகுதியில் குடியிருப்பவர்கள் மளிகை, காய்கறி உள்பட அத்தியாவசிய தேவைகளுக்கு ரயிலடி பகுதிக்கு இந்த மழைநீரில் நடந்து சென்று வந்தனர். மேலும் தேங்கிய தேங்கி நின்ற தண்ணீரில் இருந்து மிகுந்த துர்நாற்றமும், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது என்று இப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சம் தெரிவித்தனர். இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி நவம்பர் 24ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து ஊராட்சி மன்றத் தலைவர் மணிமேகலை, ஒன்றியக்குழு உறுப்பினர் தங்க.கென்னடி ஆகியோர் பொக்லைன் இயந்திரம் மூலம் தேங்கிய மழைநீரை வெளியேற்றி நடவடிக்கை மேற்கொண்டனர். செய்தி வெளியிட்ட தினகரன் மற்றும் நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.