சாயல்குடி, மார்ச் 24: சாயல்குடி அருகே பூட்டிய கோயிலை திறக்கக்கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து கிராமமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
சாயல்குடி அருகே நரிப்பையூர் கிராமத்தில் ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட வினைதீர்த்த விநாயகர், பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு சாமி கும்பிடுவதில் அக்கிராமத்தை சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது. இருதரப்பினரும் மோதியுள்ளனர், இச்சம்பவம் குறித்து சாயல்குடி காவல் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும் பரமக்குடி ஆர்.டி.ஓ அலுவலகம், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக சாயல்குடி காவல்துறையினர் அக்கோயிலை பூட்டிவிட்டனர்.
இதனையடுத்து 6 மாதத்திற்கு மேலாக கோயிலில் வழக்கமான பூஜைகள் நடக்கவில்லை. கோயிலை திறக்க வேண்டும், பூஜைகள், திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று கிராமத்தினர் கோயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். பிறகு தேர்தல் புறக்கணிப்பு செய்ய போவதாக பிளக்ஸ் பேனர் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.