திருப்புத்தூர், ஏப்.14: திருப்புத்தூர் அருகே கோட்டையிருப்பு பகுதியில் நேற்று சரக்கு வாகனம் மோதியதில் டூவீலரில் வந்த கட்டிட மேஸ்திரி சம்பவ இடத்திலேயே பலியானார். மதுரை மாவட்டம் சொக்கிக்குளம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் ராஜா (42). கட்டிட மேஸ்திரி. நேற்று காலை மதுரையிலிருந்து காரைக்குடிக்கு வேலைக்காக டூவீலரில் சென்றுள்ளார். திருப்புத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பு-கோட்டையிருப்புக்கு இடைப்பட்ட பகுதியில் சென்றபோது, மதுரையிலிருந்து, காரைக்குடிக்கு சென்று காய்கறிகளை இறக்கி விட்டு மீண்டும் மதுரை நோக்கி வந்த சரக்கு வாகனம் டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா தலை மற்றும் மார்பு பகுதியில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து சரக்கு வாகனத்தை ஓட்டிவந்த நெடுமதுரை வடக்குத் தெருவைச்சேர்ந்த அழகன் மகன் மருகன் (33) என்பவர் மீது திருப்புத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.