தக்கலை,ஏப்.14: குமரி மாவட்டத்தில் ரமலான் நோன்பு நேற்று தொடங்கியது. இஸ்லாமியர்களின் கடமைகளின் ஒன்றான ரமலான் மாத நோன்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. சூரிய உதயத்துக்கு முன் தொடங்கி சூரியன் மறையும் வரை நோன்பு இருத்தல் உலக முழுவதும் இஸ்லாமியர்களால் பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு நோன்புக்கான பிறை கேரள மாநிலத்தில் தென்பட்டதாக குமரி மாவட்ட ஹிலால் கமிட்டி அறிவித்தது. இதையடுத்து ரமலான் மாதத்தில் இரவு நேரத்தில் நடைபெறும் சிறப்பு தொழுகையான தராவீஹ் நேற்று முன் தினம் இரவு குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்றது.
திட்டுவிளை, குளச்சல், தேங்காபட்டணம், தக்கலை, திருவிதாங்கோடு, மணவாளக்குறிச்சி, சூரங்குடி, கோட்டார், குலசேகரம், களியக்காவிளை, நம்பாளி உள்ளிட்ட பள்ளிவாசல்களில் தராவீஹ் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகை 30 நாட்கள் நடைபெறும். தொழுகையின் போது குரானில் உள்ள 30 அத்தியாயங்கள் ஓதப்படும். தொழுகையில் இஸ்லாமிய மக்கள் சமூக விலகலோடு பங்கேற்றனர். தினமும் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி வழங்கப்படும்.
ஒரு சில பள்ளிவாசல்களில் கோரோனா தொற்று காரணமாக மாலை நேரத்தில் பள்ளிவாசல்களில் வைத்து கஞ்சி அருந்துவது தவிர்க்கபபட்டுள்ளது. சில பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.