மயிலாடுதுறை, ஏப்12: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 நவக்கிரக கோயில்களில் செவ்வாய்க்கிரகம் உள்ள கோயில் வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி, புராண இதிகாச ஆன்மீக வரலாற்றில் இடம் பெற்ற மிகப்பழமைவாய்ந்த கோயிலாகும். சீதையை கடத்திச்சென்ற இராவணனுடன் சடாயு என்ற கழுகு போராடி வெட்டி வீழ்த்தப்பட்ட இடம் வைத்தீஸ்வரன் கோயிலாகும். சடாயுவை எரித்த இடமும் இந்த ஆலயத்தில்தான். இக்கோயில் குளம் அகத்திய முனிவரால் நவபாஷாணங்களை கொண்டு உருவாக்கப்பட்டது ஆகவே இந்த புனித குளத்தில் நீராடினால் தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.
ஏற்கனவே குடமுழுக்கு நடைபெற்று 20 ஆண்டிற்குமேல் ஆகியதால் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துவதற்கு தருமபுர ஆதீனம் 26வது சன்னிதானம் முழு முயற்சி எடுத்து வந்தது. அவர் மறைவிற்குப் பிறகு தற்பொழுது பதவியேற்றுள்ள 27வது சன்னிதானம் மாசிலாமணிதேசிக சுவாமிகள் குடமுழுக்கு நடத்த இந்து அறநிலையத்துறையினரிடம் தேதியை வாங்கியது, இதற்கிடையே கொரோனா தொற்று அலை இரண்டாவதாகப் புறப்பட்டுவிட்டதால் கோயில் விசேஷ ங்களுக்கு தடை விதித்துள்ளது, வரும் 29ம் தேதி கும்பாபிஷேகம் என்பதால் அந்த தேதியில் குடமுழுக்கு நடைபெறுமா என்பது குறித்து இன்று மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் தருமபுர ஆதீனம் மற்றும் இந்து அறநிலையத்துறை மற்றும் வருவாய்துறை காவல்துறையினர் கலந்து கொள்கின்றனர்.