×

தக்கலை அருகே வெங்காய வியாபாரி காரில் இருந்த ₹16 லட்சம் திருட்டு ஒருவர் கைது

தக்கலை, ஏப்.12: தக்கலை அருகே வெங்காய வியாபாரியின் காரில் இருந்து ₹16 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த நாகல்குளம் பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (38) வெங்காயம், பூண்டு போன்றவற்றை கன்னியாகுமரி, தூத்துக்குடி,கேரளாவுக்கு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். அருமனை மாத்தூர்கோணம் பகுதியை சேர்ந்த பபி(31) என்பவருடன் கடந்த 2 மாதம் முன்பு  வியாபாரம் தொடர்பாக அமல்ராஜ்க்கு பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு அமல்ராஜ் ஆலங்குளம், அப்டா மார்க்கெட்டில் இருந்து வசூலான ரூ.16 லட்சத்து 63 ஆயிரத்துடன் குமரி மாவட்டத்திற்கு காரில் வந்தார். காரை கண்ணன் என்பவர் ஓட்டினார். தக்கலை பகுதியில் அவர்கள் வந்த ேபாது, பபி அமல்ராஜை தொடர்பு கொண்டு வியாபாரம் தொடர்பாக பேச வேண்டும் என்று கூறினார்.

அப்போது தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே வருமாறு அமல்ராஜ், பபியிடம் கூறினார். இதையத்து பபி, கரூர் மாவட்டம் சிவங்கப்பட்டியை சேர்ந்த ராஜா என்ற மயில் வாகனன் ஆகியோர் அங்கு வந்தனர். தொடர்ந்து பேசி கொண்டு இருந்தனர். தொடர்ந்து தக்கலை அருகே ஆழ்வார்கோயில் சந்திப்பு பகுதிக்கு சென்றனர். அப்போது பபி, அமல்ராஜ் காரில் இருந்த ரூ.16 லட்சத்து 63 ஆயிரத்தை எடுத்து மயில் வாகனனிடம் கொடுத்தார். அவர் பணத்துடன் பைக்கில் தப்பி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அமல்ராஜ், கண்ணன் சேர்ந்து பபியை பிடித்து தக்கலை போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பபியை கைது செய்து தலைமறைவான மயில் வாகனனை தேடி வருகின்றனர். இதற்கிடையே ஹவாலா பணம் மாற்ற ெகாண்டு வந்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Thakkala ,
× RELATED தக்கலை அருகே கூலித்தொழிலாளிக்கு கத்திக்குத்து