கடையம், ஏப்.9:கோடை போன்று வெயில் கொளுத்துவதால் ராமநதி அணையின் நீர்மட்டம் குறைந்து 65 அடியானது.தென்காசி மாவட்டம் கடையம் அருகே 84 அடி கொள்ளளவு கொண்ட ராமநதி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த வடகிழக்கு பருவமழையின் மூலம் மழை பொழிந்து ராமநதி அணை நிரம்பி உபரி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் பிசான பருவ நெல் சாகுபடி பயிர் செய்யப்பட்டு அறுவடையும் நடைபெற்றது. இந்நிலையில் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக கோடை போன்று வெயில் கொளுத்துகிறது. மேலும் அனல்காற்றும் வீசிகிறது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு தடைபட்டு அணை நீர்மட்டம் 65 அடியாக குறைந்தது. வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது.