×

தென்னம்பாளையம் தானியங்கி சிக்னல் பழுதால் வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர், ஏப்.8: திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக நாகராஜன் பொறுப்பேற்ற பின், நகரில் வாகன போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து சிக்னல் பகுதிகள், முக்கிய ரோடு சந்திப்புகளில் வாகனப் போக்குவரத்தை கண்காணித்து முறைப்படுத்தும் வகையில், போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். முக்கிய ரோடு சந்திப்பு மற்றும் சிக்னல் பகுதிகளில் போலீசாரை பார்க்க முடிகிறது. பல்லடம் ரோடு, தென்னம்பாளையம் சந்தைப்பேட்டையில், வெள்ளியங்காடு செல்லும் ரோடு, சந்தைப்பேட்டை செல்லும் பகுதி ஆகியன சந்திக்கும் நான்கு ரோடு சந்திப்பு பகுதி உள்ளது. இங்குள்ள போக்குவரத்து சிக்னல், அடிக்கடி பழுதடைந்துவிடுகிறது. இதனால் 4 திசைகளிலும் வரும் வாகனங்கள், ரோட்டை கடக்கும் பாதசாரிகள் என, ஒரே நேரத்தில், இந்த சந்திப்பில் ஒன்றோடொன்று முட்டி மோதியவாறு நின்று செல்லும் நிலை ஏற்படுகிறது.

இதனால், இப்பகுதியில் அடிக்கடி வாகன நெருக்கடி ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இப்பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, கூடுதல் போலீசாரை நிறுத்தவதோடு, சிக்னலையும் சரி செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Tags : Thennampalayam ,
× RELATED சிலம்ப உலக சாதனை நிகழ்வில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு