தக்கலை, ஏப்.5: பத்மநாபபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மனோதங்கராஜ் எம்எல்ஏ. நேற்று தக்கலையை அடுத்த புலியுர்குறிச்சியில் பிரசாரம் செய்தார். மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் மாதவன் பிரசாரத்தை தொடங்கி வைத்தார். அப்போது மனோதங்கராஜ் எம்எல்ஏ பேசியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைகின்ற தருணம் வந்து விட்டது. காலாவதியான குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு புதிய குழாய்கள் பதிக்கப்படும். விண்ணப்பித்த 15 நாளுக்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். கிராம கோவில் பூசாரிகளுக்கு 2 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுவதுடன் ஓய்வூதியம் 4 ஆயிரமாக மாற்றப்படும். ஊர்க்காவல் படையில் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும். புதிய ஓய்வூதியம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். நகராட்சிக்கு சொந்தமான கடைகள் அதிமுக அரசின் அபரிமித வாடகை உயர்வால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உயர்த்தப்பட்ட நகராட்சி கடை வாடகைகள் மறு ஆய்வு செய்து குறைக்கப்படும். துாய்மை பணியாளர்களுக்கும் வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும்.
பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் விஜயகுமார் என்ற விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து தக்கலை, குமாரபுரம், குலசேகரம், திருவட்டார், ஆற்றூர், வேர்கிளம்பி, திக்கணங்கோடு, திருவிதாங்கோடு, அழகியமண்டபம், மூலச்சல், ஈத்தவிளை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். இரவு 7 மணிக்கு மேக்காமண்டபம் சந்திப்பில் நிறைவு செய்தார்.நகர செயலார் மணி, ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த ஜார்ஜ், ஜாண்பிரைட், பொறியாளர் அணி வர்க்கீஸ், காங்கிரஸ் நகர தலைவர் ஹனுகுமார், வட்டார தலைவர் ஜாண்கிறிஸ்டோபர், மாவட்ட செயலளார்கள் சாகுல், வின்சென்ட் ராஜா, புரோடி மில்லர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர்கள் சைமன்சைலஸ், சந்திரகலா, வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்மின், மதிமுக மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார், விடுதலை சிறுத்தைகள் மேசியா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திமுகவில் அமமுக நகர செயலாளர்
பத்மநாபபுரம் நகர அமமுக செயலாளர் சாதிக், துணை செயலாளர் ஷாகிர் அலி உள்பட நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகி மனோதங்கராஜ் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது நகர செயலாளர் மணி, இளைஞரணி அமைப்பாளர் அனிஷ், வக்கீல் ஜெகதேவ் ஆகியோர் உடனிருந்தனர்.