×

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா வாக்குறுதி

திருவள்ளூர், ஏப்.4: திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா கடம்பத்தூர் ஒன்றியத்தில் அதிமுக ஒன்றிய செயலாளர் கே.சுதாகர் தலைமையிலும், திருவாலங்காடு ஒன்றியத்தில் சக்திவேல் தலைமையிலும் கிராமம், கிராமமாக சென்று தீவிரமாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா பேசியதாவது, “திருவள்ளூர் தொகுதியில் திறன் மேம்பாட்டு மையங்கள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க முயற்சி மேற்கொள்வேன். திருவள்ளூர் நகரத்தின் இரண்டு பக்கமும் கிடப்பில் போடப்பட்டுள்ள புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கைகளை மேற்கொள்வேன். திருவள்ளூர் தொகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்க உரிய நடவடிக்கைகளை எடுப்பேன். பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு புதியதாக அரசு பஸ் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.

நூலகங்களை நவீனப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், அனைத்துப் பகுதிகளுக்கும் தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைத்து தரவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். ஒவ்வொரு கிராமத்திற்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தருவேன். திருவாலங்காடு ஒன்றியத்தில் நான் அமைச்சராக இருந்தபோது பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தி உள்ளேன். பாலங்கள் மற்றும் தடுப்பணைகளை கட்டி தந்துள்ளேன். மீண்டும் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை உலகத்தரம் வாய்ந்த ஆலையாக மாற்றி காட்டுவேன். திருவள்ளூர் தொகுதியை தன்னிறைவு பெற்ற தொகுதியாக மாற்றி காட்டுவேன். எனவே, என்னை வெற்றி பெறசெய்ய வையுங்கள்,” இவ்வாறு அவர் பேசினார்.

Tags : AIADMK ,PV Ramana ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...