நெல்லை, ஏப். 2: விவசாய பணிகளுக்கு ஜூன் முதல் வாரம் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படுமென மானூர் ஒன்றிய பகுதியில் பிரசாரம் செய்த நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஏஎல்எஸ்.லட்சுமணன் வாக்குறுதி அளித்து ஓட்டு சேகரித்தார். நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஏஎல்எஸ்.லட்சுமணன், தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி நேற்று காலை மானூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பணிகரிசல்குளம், வெள்ளாளன்குளம் உள்ளிட்ட கிராமங்களில வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த பகுதியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றி கொடுக்கப்படும். தடையின்றி குடிநீர் வசதி செய்து தரப்படும். விவசாய பணிகளுக்கு ஜூன் முதல் வாரம் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் கூடுதலாக அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும் திமுக ஆட்சி அமைந்ததும் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ள மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக செயல்படுத்தப்படும். எனவே நெல்லை தொகுதியில் போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வெற்றியை தேடித் தர வேண்டும், என்றார். பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன், அன்பழகன், கிளை செயலாளர்கள் அருணாசலம், முத்துமாரி மற்றும் நாராயணன், மாரியப்பன், இளைஞரணி மனோகர், பொதுக்குழு உறுப்பினர் சேவியர், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், மாநகர துணை செயலாளர் ரமேஷ், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் பேச்சிமுத்து, கல்லத்தியான், விடுதலைசிறுத்தைகள் கரிசல் சுரேஷ், ராஜ்குமார், மூர்த்தி, நெல்லை முத்தையா, முருகன், கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.