மொடக்குறிச்சி, ஏப். 1: தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக மொடக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும் படையினர் கருமாண்டாம்பாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனையிட்டனர். காரில் ஈரோடு மோளக்கவுண்டன்பாளையம் பாலதண்டாயுத வீதியைச் சேர்ந்த மீன் வியாபாரியான ராஜேஷ் (36) இருந்தார். இவர் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணத்துடன் மீன் வாங்குவதற்காக நாகப்பட்டிணம் செல்வதாக அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் சங்கர் கணேஷிடம் ஒப்படைத்தனர்.