புழல்: மாதவரம் தொகுதி திமுக வேட்பாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், வில்லிவாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் திமுக நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பங்கேற்று, பாட்டு பாடி வாக்கு சேகரித்தார். வழிநெடுகிலும் பெண்கள் மலர்தூவி, ஆரத்தி எடுத்து அவர்களை வரவேற்றனர். அப்போது அப்பகுதி மக்களிடம் சுதர்சனம் பேசுகையில், ‘தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததும், இப்பகுதிகளில் நீண்ட காலமாக வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர், சாலைகள், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவேன். எனவே, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார்.
பிரசாரத்தின்போது வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை வீரமணி, மாவட்ட கவுன்சிலர் சதீஷ்குமார், சென்னை வடகிழக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாத்தூர் காசிநாதன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மோரை திவாகர், வெள்ளானூர் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர் குணா தயாநிதி, பொத்தூர் ஊராட்சி செயலாளர் வழக்கறிஞர் மாரி உள்பட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.