தூத்துக்குடி, மார்ச் 30: தூத்துக்குடி சகாயபுரம், மினிசகாயபுரம் பகுதி மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று த.மா.கா. வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் உறுதியளித்தார். தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலன், மினி சகாயபுரம், சகாயபுரம், டயன்ஸ் டவுன், அன்னை தெரசாநகர், இனிகோநகர், பாத்திமாநகர், காந்திநகர், இந்திராநகர், கணேசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தார். மினிசகாயபுரம் பகுதிகளில் வாக்கு சேகரித்தபோது, துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலின் வீட்டிற்கு சென்ற எஸ்.டி.ஆர். விஜயசீலன், ஸ்னோலின் பெற்றோர் ஜெட்சன்-வனிதா ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார். ஸ்னோலின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, ஸ்னோலின் பெற்றோர், தனது மகளின் மரணத்தின் நிமித்தமாக தனது மகனுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மகனின் படிப்பிற்கு தகுந்த வேலை அவனுக்கு வழங்கப்படவில்லை. எனவே எங்களது மகனுக்கு கல்வித் தகுதிக்கேற்ற பணி வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் தங்கள் பகுதியில், மினிசகாயபுரம், சகாயபுரம், லயன்ஸ்டவுன் 8வது தெரு உள்ளிட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்காமல் உள்ளது. அதனை பெற்றுத்தர வேண்டும்’ என்றனர்.
அதற்கு வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலன், தான் வெற்றி பெற்றவுடன் இந்த பகுதி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்கவும், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை கல்வித்தகுதி அடிப்படையில் வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதியளித்தார். பிரசாரத்தின் போது அ.தி.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் அமிர்த கணேசன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் மனோஜ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் கோல்டன், அருள்தாஸ், மீனவர் அணித் தலைவர் டெலஸ்போர், வட்டச் செயலாளர் சகாயராஜ், பெலிக்ஸ், கெபின், ஞாயம்ரொமால்ட், கென்னடி, த.மா.கா. சார்பில் மாநகரத்தலைவர் ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.