×

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நூறு நாள் வேலை 150 நாளாக உயர்த்தி முழு கூலித் தொகை திருவாரூர் வேட்பாளர் பூண்டி கலைவாணன் உறுதி

திருவாரூர், மார்ச் 28: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட்டு கூலித் தொகை முழுமையாக வழங்கப்படும் என திருவாரூர் தொகுதியின் வேட்பாளர் பூண்டிகலைவாணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பூண்டிகலைவாணன் தொகுதி முழுவதும் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், மாணவர், மகளிர் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று கொரடாச்சேரி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஊர்குடி, அத்திசோழமங்கலம், திருமதிகுன்னம், தியாகராஜபுரம், காவனூர், அம்மையப்பன், பெருந்தரகுடி, தேவர்கண்டநல்லூர், கமலாபுரம், எருக்காட்டூர், பருத்தியூர், மேலராதாநல்லூர், கண்கொடுதவனிதம், விடயபுரம், முசிறியம், திருவிடைவாசல், அத்திக்கடை, பெருமாளகரம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமங்களில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் காவனூர் பகுதியில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்பட்டு கூலி தொகை முழுமையாக வழங்கப்படும். விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.ஆயிரம் உரிமை தொகை வழங்கப்படும். காஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதால் உதயசூரியன் சின்னத்தில் தன்னை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போது பெண்கள் அனைவரும் உங்களுக்குதான் எங்கள் ஓட்டு என்று தெரிவித்து பூண்டிகலைவாணனை வாழ்த்தி அனுப்பினர். இந்த பிரசாரத்தின்போது ஒன்றிய செயலாளர்கள் பாலச்சந்தர், கலியபெருமாள், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் மற்றும் கட்சியினர், கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags : Boondi Kalaivanan ,
× RELATED மன்னார்குடியில் காலமான மக்கள்...