செங்கல்பட்டு, மார்ச் 29: மறைமலைநகர் நகராட்சி முழுவதும் பாலாற்று குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் உறுதியளித்தார். செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கஜா (எ) கஜேந்திரன் மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், பாரதியார் தெரு, பாவேந்தர் சாலை, திருவள்ளுவர் சாலை, அம்பேத்கர் தெரு, தொழிற்சாலை பகுதி உள்பட 3,4,5,6,7 ஆகிய வார்டுகளில் திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரித்தார். அவருக்கு பொதுமக்கள், பெண்கள் ஆரத்தி எடுத்து, மாலைகள் அணிவித்து வரவேற்றனர்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘மறைமலைநகர் நகராட்சி முழுவதும் உள்ள 21 வார்டுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட பாலாற்று குடிநீர் தடையின்றி சப்ளை செய்யப்படும். அனைத்து பகுதிகளுக்கும் உள்கட்டமைப்பு வசதி செய்துதரப்படும். நகராட்சியின் அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். மழைநீர் வடிகால்வாய்கள், நீர் நிலைகள் சீரமைக்கப்படும். குளம் குட்டைகள் தூர் வாரப்படும். அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து அரசு திட்டங்களையும் தவறாமல் மறைமலைநகர் நகராட்சி பகுதிக்கு பெற்றுத்தருவேன் என்றார். பிரசாரத்தின்போது, மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் எம்.ஜி.கே.கோபிகண்ணன், நகர அதிமுக செயலாளர் ரவிக்குமார், வட்ட செயலாளர்கள் தசரதன், பாரதி, தமிழரசு, ராஜகோபால், சாரதி, பார்த்தசாரதி, பாமக நகர செயலாளர் சரவணன் உள்பட பாஜ, தமாகா, புரட்சிபாரதம் ஆகிய கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.