×

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உருக்கம் கடவுளுக்கு சமமானவர்கள் விவசாயிகள்

நெல்லை, மார்ச் 26: எல்லா உயிருக்கும் உணவை உற்பத்தி செய்து வழங்கும் விவசாயிகள், கடவுளுக்கு சமமானவர்கள் என்று, தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பேசினார்.நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன், ஏர்வாடி, பாளையங்கோட்டை மத்திய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: 2019 நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட்டேன். நீங்கள் வாக்களித்தும் வெற்றியை இழந்துவிட்டோம். அது தோல்வியல்ல. அதுவும் ஒருவகையில் வெற்றிதான். கடந்த ஒன்றரை ஆண்டுகளில்  நாங்குநேரி தொகுதிக்கு என்னென்ன தேவை? ஒரு எம்எல்ஏ சட்டமன்றத்தில் தொகுதிக்காக என்ன பேச வேண்டும்? என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன்.இடைத்தேர்தலுக்குப் பிறகு, நன்றி சொன்ன போது, மாற்றுக்கட்சியைச் சேர்ந்த பலர் என்னிடம் ‘நீங்க ரொம்ப நல்ல வேட்பாளரா இருக்கீங்க. நீங்க பெரிய தொழிலதிபர், ஜெயிச்சா தொகுதி பக்கமே வரமாட்டாரு என்று சொன்னதை எல்லாம் நம்பி ஓட்டுப் போடாம விட்டுட்டோம். ஆனா, நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க’ என்றனர். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

கடந்த ஒன்றரை வருடமாக நாங்குநேரியில்தான் வசிக்கிறேன். இனி, நாங்குநேரியை விட்டுப் போக மாட்டேன். மடிந்தாலும், இந்த மண்ணில்தான் மடிவேன். என்னுடைய வாழ்வை மக்கள் பணிக்காக அர்ப்பணித்து இருக்கிறேன்.
நான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கடும் உழைப்பால் உயர்ந்தவன். பெருந்தலைவர் காமராஜர் வழி நடக்கிறேன். நம் தொகுதியில் நிறைய ஏரி, குளங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீரை சேமித்துவைத்து, நவீன முறையில் விவசாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் லாபகரமான தொழிலாக விவசாயம் மாறும். இப்போது, உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்கிற நிலைதான் உள்ளது. இதை மாற்ற வேண்டும். விவசாயம் செய்தால், மாதம் லட்சம் ரூபாய்க்கும் மேல் லாபம் சம்பாதிக்கலாம் என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.எல்லா உயிருக்கும் உணவு அவசியம். ஒருநாள் வாழக்கூடிய சின்னஞ்சிறிய புழுகூட உணவுக்காகத்தான் போராடுகிறது. அந்த உணவு உற்பத்தி செய்யும் விவசாயியே உயர்ந்தவன். அவன், கடவுளுக்கு சமமானவன். அவன் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கை வைக்க முடியும். நம் தொகுதியில் நிச்சயம் விவசாயப் புரட்சி ஏற்படுத்தப்படும். விவசாயம் செய்தால்தான் நல்ல வருமானம் கிடைக்கும் என்கிற நிலையை உருவாக்குவேன்.

நீங்கள் ஒவ்வொரும் கைச் சின்னத்துக்கு அளிக்கும் வாக்கு, உங்களை மகிழ்ச்சியோடு வாழ வைக்கும். நாங்குநேரி தொகுதியையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.அதனால், கைச்சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.களக்காடு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்  செல்வகருணாநிதி, நகர செயலாளர் அயூப்கான், நகர காங்கிரஸ் தலைவர் பைசல்,  ஜெர்மான்ஸ், மதிமுக நகர செயலாளர் கந்தையா, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள்  எம்எல்ஏ கிருஷ்ணன், விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர்  பெரும்படையார் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Tags : Congress ,Ruby Manokaran ,God ,
× RELATED “ராபர்ட் ப்ரூஸுக்கு அர்ப்பணிப்புடன்...