×

மக்கள் விரோத அதிமுக அரசை அகற்றிட திமுகவை ஆதரியுங்கள் திருவாரூர் வேட்பாளர் பூண்டி கலைவாணன் பிரசாரம்

திருவாரூர், மார்ச் 25: மக்கள் விரோத அதிமுக அரசினை அகற்றிட அனைவரும் திமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தேர்தல் பிரசாரத்தில் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். திருவாரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கட்சியின் மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களிடமும் வாக்கு சேகரித்து வரும் நிலையில் நேற்று தொகுதிக்குட்பட்ட மன்னார்குடி கிழக்கு ஒன்றியத்தில ஓகைப்பேரையூர், வடபாதி, கல்லடி கருணாவூர், வேம்பூர், வடகட்டளை, பழையனூர், கொத்தங்குடி, பாண்டுகுடி, தென்கோவனூர், தண்ணீர்குன்னம், சாத்தனூர், புனவாசல், வடபாதிமங்கலம், அரிச்சந்திரபுரம்,புள்ளமங்கலம், பாலகுறிச்சி, பூந்தோட்டம், ஆதிவிடங்கம், சித்திரையூர், சிக்கவெளி, கருப்பூர், சித்தன்னக்குடி, வேளூக்குடி உட்பட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் விலைவாசி என்பது கடுமையாக உயர்ந்துள்ளது.

விலைவாசியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்காத இந்த அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசு சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையினை வராலாறு காணாத வகையில் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக நடுத்தர மற்றும் ஏழை, எளிய, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைமையிலான ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். பால் விலை குறைக்கப்படும். சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படும். குடும்பத் தலைவிக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று பல்வேறு அறிவிப்புகளை தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே இந்த மக்கள் விரோத ஆட்சியை அகற்றி தமிழகத்தில் திமுக தலைமையிலான மக்களாட்சி அமைந்திட அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். பிரசாரத்தின்போது மன்னை கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,AIADMK government ,Thiruvarur ,Boondi Kalaivanan ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்