நாங்குநேரி, மார்ச் 24: முழு வாக்களிப்பை வலியுறுத்தி நாங்குநேரி கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். நாங்குநேரி அருகேயுள்ள சூரங்குடி கிறிஸ்டோபர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் என்எஸ்எஸ் மாணவிகள் வரும் சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி களக்காட்டில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். கல்லூரியின் தலைவர் பிரவீன் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். களக்காடு சுகம் மருத்துவமனை மருத்துவர் ஆதாம் சேக்அலி கொடி அசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்.
100 சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தி வாக்காளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பதாகைகளை கல்லூரி மாணவர்கள் கையில் ஏந்தி பல்வேறு முக்கிய தெருக்களில் ஊர்வலமாக சென்றனர். அப்போது அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனவும் கோஷமிட்டனர். நிகழ்ச்சியில் களக்காடு இன்ஸ்பெக்டர் அருள்பிரகாசம், கல்லூரி முதல்வர் ரோஷன் மற்றும் ஆசிரியர்கள் நிக்சன், தேவராஜ், ஜான்சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.