அறந்தாங்கி, மார்ச் 24: அறந்தாங்கி அருகே தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அறந்தாங்கி தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ ராஜநாயகம் போட்டியிடுகிறார். நேற்று (செவ்வாய் கிழமை) மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது மேலஏம்பல் பகுதியில் அங்கிருந்த பெண்களிடம் தேர்தலுக்காக ஆசை வார்த்தை கூறி இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கூறி பணம் கொடுத்துள்ளனர்.
வாக்காளர்களுக்கு விதிகளை மீறி பணம் வழங்கியதாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி தங்கம் மீமிசல் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் மீமிசல் எஸ்.ஐ துரைசிங்கம், தேர்தல் விதியை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அறந்தாங்கி தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜநாயகம், மணமேல்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் துரைமாணிக்கம், நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.